January 28, 2012 · 0 Comments
பட்டதாரி பெண்களும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பணத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கு, உச்சநீரிமன்றத்தில் நீதிபதிகள் அல்டமஸ் கபீர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மறுவாழ்வு நடவடிக்கை
அப்போது நீதிபதிகள் கூறுகையில், “இன்றைய தினம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண்களும், பட்டதாரிகளும் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதை காண்கிறோம். அவர்கள் தாங்களாக விருப்பப்பட்டு இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்துடைப்பு கூடாது
விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக, நாம் எத்தனையோ கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துகிறோம். ஆனால் அத்துடன் அந்த பிரச்சினையை முடித்துக்கொள்கிறோம். உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஏதாவது நடவடிக்கை எடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அது நமது மனசாட்சிக்கு திருப்தியாக அமைய வேண்டும். வெறும் கண்துடைப்பாக அமைந்துவிடக்கூடாது. எனவே, மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வரும்,” என்றனர்.
மேலும், வக்கீல்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு கமிட்டி செயல்பட சட்ட கமிஷன் அலுவலகத்தில் 3 வாரங்களுக்குள் இடம் ஒதுக்குமாறு கூடுதல் அட்டர்னி ஜெனரல் பி.பி.மல்கோத்ராவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
By Ottran.com
Tags: விபச்சாரம், உச்ச நீதிமன்றம், prostitution, supreme court