January 25, 2012 · 0 Comments
ஈழத் தமிழர் தாயகமான யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், அங்கு இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு மாணவி கேட்ட கேள்வி அவரை வெகுவாக கவர்ந்தது. இதுபோல ஒரு கேள்வியை இதுவரை நான் கேட்டதில்லை, இப்படி ஒரு திறமையான மாணவியை சந்தித்ததில்லை என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கலாம்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட கலாம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.அங்குள்ள இந்துக் கல்லூரியை பார்வையிட்ட அப்துல் கலாமிடம் ஆறு மாணவ மாணவிகள் கேள்விகளை எழுப்பினர்.
அதில் சிறு மாணவன் ஒருவன், ஐயா நீங்கள் யாழ்ப்பாணம் வந்ததற்கு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினான்.
அந்த மாணவனது இந்தத் திடீர் கேள்வி அனைவரையும் கவர்ந்ததுடன் பலத்த கைதட்டலையும் பெற்றது. அதற்கு பதிலளித்த அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் லட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்ய வேண்டும் என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கலாம், உனது இதயத்தில் நேர்மை இருந்தால் உனது செயலில் அழகு இருக்கும். செயலில் அழகு இருந்தால் வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால் நாட்டில் அமைதி இருக்கும். நாட்டில் அமைதியிருந்தால் உலகில் சமாதானம் இருக்கும் என்று ஆங்கிலத்தில் பதிலளித்தார். பின்னர் தனது பதிலை அனைவருக்கும் கேட்கும் வகையில் நீயே கூறு என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அந்த மாணவி Where there is righteousness in the heart there is beauty in the character. When there is beauty in the character there is harmony in the home. When there is harmony in the home there is an order in the nation. When there is an order in the nation there is peace in the world என்று பளிச்சென தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த கலாம் இந்த மாணவி குறித்து குறிப்பிட்டுக் கூறி பாராட்டினார். அவர் கூறுகையில், இப்படி ஒரு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது. அந்த மாணவி கேட்ட கேள்விக்கு பதிலளித்த நான் அந்த பதிலைத் திருப்பிக் கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர் அதனை திருப்பிக் கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை நான் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் தான் என்றார் நெகிழ்ச்சியுடன்.
வழக்கமாக அப்துல் கலாம் வருகிறார் என்றால் மாணவர்களிடையே பெரும் ஆர்வம் அலை மோதும், கூட்டமும் மிகுதியாக இருக்கும். ஈழமும் இதில் விதி விலக்கல்ல, யாழ்ப்பாணம் சந்திப்பிலும் கூட மிகப் பெரிய அளவில் மாணவர் பட்டாளம் திரண்டு வந்திருந்தது.
By Ottran.com
Tags: abdul kalam, யாழ்ப்பாணம், அப்துல் கலாம்